×

நுரையீரலை காக்கும் மூலிகைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

துளசி: துளசி அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வு தரும் மூலிகை. தினமும், 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்னைகள் சீராகும். நுரையீரலை பலப்படுத்தவும் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.

ஆடாதோடை: ஆடாதோடை மூலிகை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது இருமல் ஏற்பட்டால் கால் தேக்கரண்டி ஆடாதோடை பொடியை தேவையான அளவு தேனில் குழைத்து கலந்து சாப்பிட்டு வந்தால், சளி குணமாவதோடு நுரையீரலும் பலமாக இருக்கும்.

இலவங்கப்பட்டை: இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி வைரல் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிபங்கல் தன்மை நிறைந்துள்ளது. சளி, தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணமாக்கும்.

மிளகுதூள்: மிளகில் வைட்டமின் சி. ப்ளேவனாய்டு, ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு இதை சாப்பிடலாம்.

ஏலக்காய்: ஏலக்காய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. குறிப்பாக சளி, இருமல் மற்றும் நுரையீரல் கோளாறுகளை சரி செய்யக்கூடியவை.

கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இலையில் நுரையீரலை சுத்தம் செய்யும் பண்புகள் ஏராளமாக உள்ளன. இது நுரையீரலில் உள்ள அழற்சியைக் குறைப்பதோடு, சளி தேக்கத்தையும் தடுக்கும்.

அதிமதுரம்: அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கி, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுர சூரணத்தை (பொடி) 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி இருந்தால் குணமாகும்.

அகத்திக்கீரை: அகத்திக்கீரையின் பூ நுரையீரலுக்கான சிறந்த உணவு. அகத்திப்பூ, உடலில் இருக்கும் நிக்கோட்டினின் அளவைக் குறைக்க உதவும். உடலில் உள்ள நஞ்சை வெளியேற்றி விடும். கண் சிவந்து போதல், கண்களில் நீர் வழிதல், அலர்ஜி காரணமாகக் கண்களில் பிரச்னை, சூரிய வெப்பம், தூசு, புகையால் ஏற்படும் கண் எரிச்சல், கண் அழுத்தம், கண் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கு அகத்திப்பூ கலந்த நீரால் கண்களைக் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

தொகுப்பு: இரா. அருண்குமார்

The post நுரையீரலை காக்கும் மூலிகைகள்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dr. ,Tulsi ,Dinakaran ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!